வாடகைக் குடித்தனக்காரர்களின்
வாழ்க்கை கொஞ்சம்
நாடகத்தனமானது ......
நிரந்தரமில்லாத விலாசங்களை
தன்னுடயதாய் நம்பிக்
கொண்டிருப்பதின் நியாயம்
யாருக்கும் புரியாதது ......
கொடுக்க முடிந்த
வாடகையில் கிடைக்கும்
வீட்டில் குடியேறவேண்டும் ......
விருப்பம் இருக்கிறதோ
இல்லையோ வாழ்கிற
வீட்டை நேசித்தே
ஆகவேண்டும் .....
வீட்டுக்காரரைப் பார்க்கும்
போதெல்லாம் பணிவாய்
அளவாய் சிரிக்கவேண்டும் .....
வாடகைத்தேதி தவறிவிட்டால்
வசவுகளை இன்முகத்துடன்
ஏற்கவேண்டும் ......
சிரிப்பதோ அழுவதோ
சத்தமில்லாமல் இருப்பது
உத்தமம் .....
உறவினர்கள் வருகையும்
கூட அவசர சிகிச்சைப்பிரிவு
மனநிலையை தரலாம் ...
கோபத்தில் கதவை
அறைவதோ குண்டா
உருட்டுவதோ என்றைக்கோ
கிடைக்கும் விசேச அனுமதி ........
ஆசையாய் வளர்த்த
பூச்செடிகூட அடுத்த
நகர்விற்கு உடன்வரும்
என்பது உறுதியாய்
இருக்காது .....
நேசித்த .....,
முத்தம் பதித்த .....,
இன்பம் பரப்பிய .....,
இல்லங்களிலிருந்து எப்போது
வேண்டுமானாலும் துரத்தபடலாம்...
சுவற்றில் மாட்டப்படும்
படங்களிலிருந்து , சுவற்றை
நிரப்பும் வர்ணங்கள் வரை
சுயமாய் தீர்மானிக்கமுடியாது .....
மரங்களின் நிழல்கள்
நெகிழ்ச்சியை தரலாம் ,
மட்டைகள் உடைத்த
ஓடுகள் மழைநாளில்
நித்திரை கெடுக்கலாம் ...
குளியலறை கீதங்கள்
தடைசெய்யப்பட்ட
குடித்தனங்களும்
உண்டு...
கட்டுப்பாடுகள் காறி
உமிழும் எச்சில் சுவாசங்களின்
வழியே வாழ்க்கை நகர்கிறது .......
கடிகாரங்களும் காலண்டர்களும்
நிர்ணயிக்கும் வாழ்கையின்
அரசியலில் நான்
உணர்ந்து கொண்டது ,
வாடகைவீடு என்பது
"ஒரு கவுரவ சிறைக்கூடம் "
என்பதன்றி வேறு
ஒரு பதமுமில்லை ......